ராகுலின் மன்னிப்பும் மன்னிப்பாளர்களும்

எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்த கதையாக ராகுலின் வக்கீல் முன்னர் அளித்த அபிடவிட் மனுவில் மூன்று பிழைகள் இருப்பதாகத் தெரிவித்தார்

0
1903
ராகுலின் மன்னிப்பு
ராகுலின் மன்னிப்பு

பிரச்னை என்னவென்றால் “ராகுலிடம்” இருந்து வந்த மன்னிப்பு தவறை உணர்ந்து கேட்கப்பட்டதில்லை. வலியுறுத்தி கேட்க வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது மேன்மை பறி போய்விட்டது.

அமெரிக்க நடிகர் ஸ்டீவ் மார்ட்டின் ஒரு சமயம், “மன்னிப்பா? வெறுப்பாக இருக்கிறது. அது கோழைத்தனம், ஒருவர் என்ன தான் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்பது ஒரு மனிதனின் கண்ணியத்தை குறைக்கும்” என்றார்.  மன்னிப்பு என்பது சிலருக்கு வெறும் வாய் வார்த்தை. அது ஒரு ஏமாற்று வித்தை. ராகுல் காந்தி இப்போது இந்த ஏமாற்று வித்தை பிரச்னையில் சிக்கியுள்ளார்.

சௌகிதார் மோடி ஒரு திருடன் என்று ராகுல் பேசியதால் அவர் நீதிமன்றத்தால் மன்னிப்பு கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அவர் உடனே ஒரு அஃபிடவிட மனு தாக்கல் செய்து அதில் பிரதமரை அவ்வாறு [திருடன்] பேசியதற்கு வருந்துகிறேன் என்றார். மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மனுவில் குறிப்பிடவில்லை. இத்துடன் இந்தப் பிரச்சனை முடிந்து விடவில்லை. நீதிமன்றம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பு  வழக்கைச்  சந்திக்க வேண்டும் என்று  தெரிவித்தது. மன்னிப்பு கேட்காவிட்டால் இந்த வழக்கில் ராகுல் சிறை செல்ல நேரிடும்.

ராகுலுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் தெளிவாக “என்னை மன்னியுங்கள் நான் பேசியது தவறு” என்று தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை செல்ல வேண்டும். செய்த தவறுக்கு மன்னியுங்கள் என்று கேட்டால் இவரது கவுரவம் குறைந்து போய்விடும் என்று ராகுல் நினைத்து ‘வருந்துகிறேன்’ என்று கேட்டிருக்கலாம். ஆனால் இப்போது விஷயம் மேலும் சிக்கலாகி விட்டது. மன்னிப்பு கேட்டால் ஒழிய இவர் தண்டனையில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற கிடுக்கிப்பிடி சூழ்நிலை உருவாகிவிட்டது. இத்தருணத்தில் அவரது வக்கீல் முதலில் அளித்த மனுவில் 3 பிழைகள் நேர்ந்துவிட்டதாகக்  கூறியிருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. இவருடைய ஆணவப் பேச்சும் மன்னிப்பு கேட்காத நிலையும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிப்பது உறுதி. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தனது மேடைகளில் ‘சவுகிதார் ஒரு திருடன்’ என்று பிரதமருக்கு எதிராக பிரச்சாரம் செய்துகொண்டு வந்தது. மக்களிடையே இந்த வாசகத்துக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் இக்கட்சி அர்த்தமற்ற நிலையில் இதை மேடைதோறும் முழங்கியது. இவ்வாறு முழங்கியதன் பலனை இப்போது அனுபவிக்கிறது. இனி காங்கிரஸ் கட்சியால் இந்த வாசகத்தைப் பாதியில் விடவும் முடியாது. அதே சமயம் மன்னிப்பு கேட்காவிட்டால்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும்  சந்திக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை இக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் ‘ஸ்பின் மாஸ்டர்கள்’

காங்கிரஸ் கட்சியின் ‘ஸ்பின் மாஸ்டர்கள்’ தர்ம சங்கடமான நிலையில் சிக்கியுள்ளனர்.  நடந்த தவறை சரி செய்வதாக நினைத்து காங்கிரஸ் கட்சியினர் பந்தைச்  சுழற்றி வீசுகின்றனர்.  தங்கள் தலைவர் ராகுல் வருத்தம் தெரிவித்தது அவருடைய பெருந்தன்மையை உணர்த்துவதாகப் படம் காட்டுகின்றனர்.  அதாவது ராகுல் வருத்தம் தெரிவித்ததே அவர் தனது  தவறை உணர்ந்து தெரிவித்ததல்ல என்பது போலவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால் தான் செய்யாத ஒரு தவறுக்கு நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்றுப் பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது போலவும் ஒரு மாயையை ஏற்படுத்த முனைகின்றனர். மேலும் அந்த வாசகத்தைத் திரும்பவும் மேடைகளில் பயன்படுத்த வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.  ரஃபாலே வழக்கில் இன்னும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. காங்கிரசின் சார்பாக (அதன்  ‘ப்ராக்சிகள்’ என இயங்கிக் கொண்டிருக்கும்) சிலர் அளித்துள்ள மறுஆய்வு மனுவின் மீது விசாரணை நடைபெற உள்ளது. இம்மனு அளித்திருப்பதால் மட்டுமே மோடி அரசு குற்றம் செய்துவிட்டது ஆகாது.

வேறு பல பிரச்சனைகள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளார். சான்றாக, காங்கிரஸ் கட்சி ஏன் தேச விரோத செயல்களில் ஈடுபடும் தேச விரோதிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது? அவர்களுக்கு எதிரான  சட்டத்தை [anti-sedition law ] நீக்கிவிட உறுதி அளித்தது ஏன்? தீவிரவாதத்துக்கு எதிராக ஆயுதப் படையினர் மற்றும் ராணுவத்தினர்  செயல்பட வாய்ப்பளிக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் சிறப்புப் பாதுகாப்புச்  சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதாகக் அறிவித்தது ஏன்?

இதனால் நமது ராணுவத்தினர் தீவரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தடைபடாதா? சட்டப் பிரிவு 37௦ நடைமுறையில் இருப்பதால் அதன் நோக்கம் நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் அந்தச் சட்டத்தைப் பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகின்றனர்? ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ரொக்கப் பணம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறதே அந்த ‘நியாயத் திட்டத்துக்கு’ எங்கிருந்து அவ்வளவு பணம் வரும்? இந்தக் கேள்விக்குச்  சிறுபிள்ளைத் தனமாக ராகுல் பதில் அளித்திருக்கிறார். ‘நாங்கள் அதானியிடம் இருந்தும் அம்பானியிடம் இருந்தும் பணத்தைப்  பிழிந்து  எடுப்போம்’ என்கிறார்.  இது நடக்கிற காரியமா?

யோசிக்காமல் பேசுகிறாரா?

காங்கிரஸ் தலைவர் ராகுல்  எப்போதுமே யோசிக்காமல் பேசுவதையே வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்.  அக்கட்சியினரும்  வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவார்கள். ஆர் எஸ் எஸ் தான் காந்தியடிகளைக் கொன்றது என்று ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை ராகுல் முதலில் தெரிவித்தார். சமீபத்தில் ‘மோடி’ என்ற குடும்பப் பெயர் தவறு செய்பவர்களைக் குறிக்கிறது என்றார். அவருடன் இருக்கும் ‘அல்லக்கைகள்’ அரைகுறை அறிவுடன் ராகுலுக்கு எதையாவது தவறாகச் சொல்லிக் கொடுக்கின்றனர். அவரும் அதன் உண்மைத்தன்மை அறியாமல் மேடையில் பேசிவிடுகிறார். பிறகு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு இவர் பேசிய பேச்சுக்களுக்காக நீதிமன்றத்தில் அல்லாடுகிறது. இந்நாட்டின் எதிர்காலப் பிரதமராக வர விரும்பும் ஒருவர் பேசும் பேச்சாக அவை இருப்பதில்லை. இவை பெரும்பாலும்  இரண்டு வகையான பிரச்னைகளால் ஏற்படுகிறது. ஒன்று, ராகுல் தன்னுடன்  தவறான ஆலோசனையாளர்களை வைத்திருக்கிறார். இரண்டு, அவருக்கும் எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் அறிவு கிடையாது.

இந்த பிரச்னைகள்  போதாது என்பது போல அவர் மீது குடியுரிமை பிரச்னை வேறு இருக்கிறது. உள்துறை அமைச்சகம் இப்போது இந்தப் பிரச்னையைக் கிளறத் தொடங்கிவிட்டது. பல மாதங்களாக மூத்த பி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசி வந்த இவ்விஷயம் இப்போது சூடு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு பாராளுமன்ற அறநிலைக் குழு ராகுல் மீது நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தது. இப்போது அது பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது. ராகுலுக்கு அவரது பிரிட்டிஷ் குடியுரிமை பற்றி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுவரை இப்பிச்ன்னை எழுப்பப்படாமல் இருந்ததால் தேர்தல் ஆணையமும் அவரை  தேர்தலில் நிற்க அனுமதி வழங்கியது. யாருமே இது வரை அவருடைய பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பவில்லை. இப்போது விஷயம் வெளியே வந்துவிட்டது. இனி விசாரணை தொடங்கிவிடும். உண்மை வெளிப்பட்டுவிடும் .

தேர்தல் களத்தில் ராகுல் மோடியை சந்திப்பது இனி சிரமம்  தான். இப்போது தோன்றியுள்ள பிரச்சனைகள் காங்கிரஸ் கட்சிக்கும் தலைவருக்கும் தீராத தலைவலியை உணடாக்கப் போவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here