இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா சம்புரோஷனம் நடைபெற வேண்டும் என்ற விதி முறை எதுவும் கிடையாது. கோயிலில் திருட்டு நடந்தால், பத்ம பீடத்தில் உள்ள சாமி சிலையில் [விக்கிரகம்] அசைவு ஏற்பட்டால், நைவேத்தியம், பூஜை, ஆராதனைகள் ஏதெனும் காரணத்தால் நிறுத்தப்பட்டால் மகா சம்புரோஷனம் செய்ய வேண்டும் என்று தான் ஆகமம் எடுத்து கூறுகிறது.
இருப்பினும் மிராசி அர்ச்சகர்களால் திருப்பதியிலும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா சம்புரோஷனம் நடை முறை பின்பற்றப்படுகிறது அதற்குரிய காரணங்கள் வருமாறு
- கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிறிய மற்றும் பெரிய கோளாறுகளை சரி செய்வது, பழுது நீக்குவது, தேவைப்பட்டால் கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் கோளாறுகளையும் சரி செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கட்டுரையில் 1800 ஆம் ஆண்டில் இருந்து வந்த நடைமுறைகளை விளக்குகிறேன்
- எடை மிகுந்த நகைகள் நிறைய அணிவிப்பதால் கர்ப்ப கிரகத்தில் உள்ள பெருமாள் சிலை தனது பத்ம பீடத்தில் இருந்து பிடிப்பு விலகி அசைவதும் உண்டு.
- ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சாளக்கிராம அர்ச்சனை நடைபெறுவதாலும் பத்ம பீடத்தில் இருந்து பெருமாள் சிலை சற்று அசையலாம். அதற்காக புனரமைப்பு பணிகள் தேவைப்படுகின்றன.
- அஷ்டபந்தன முறையில் பயன்படுத்தப்படும் எட்டு மூலிகைகள் காலப்போக்கில் வீர்யம் இழந்து போவதால் சிலை பீடத்தில் நிற்காமல் ஆட்டம் காண்பதும் உண்டு. எனவே மிராசி அர்ச்சகர்கள் ஆகமமுறையில் இல்லாவிட்டாலும் சிலையை நிலை நிறுத்த பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு பணிகளை நடத்துவது நல்லது என்று முடிவு செய்தனர். அப்போது பாலாலயம் அமைத்து அனைத்து பூசைகளையும் நடத்திவிட்டு கர்ப்ப கிரகத்தில் புனரமைப்பு பணிகளை நடத்துவர்.
எந்த கோயிலிலும் மகா சம்புரோஷனம் என்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயமாகும். அவர்கள் பெரும் கூட்டமாகக் கூடி கோபுர கலசத்தில் இருந்து தெளிக்கப்படும் புண்ணிய நீர் துளிகள் தங்கள் தலையின் மீதும் விழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்பர்.
இந்த ஆண்டும் மகா சம்புரோஷனம் அடுத்த மாதம் பதினோராம் நாள் முதல் பதினாறாம் நாள் வரை நடைபெறுகிறது. அப்போது கோயில் சாத்தப்படும். ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் பதினேழாம் தேதி அன்று பக்தர்களுக்கு கோயில் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்தால் மகா சம்புரோஷன வரலாறு தெரியாமல் தேவஸ்தானம் இவ்வாறு அறவித்துள்ளது என்று தான் கருதத் தோன்றுகிறது.
இந்த அறிவிப்பு என்ன திருமலையில் நடந்த மகா சம்புரோஷன வரலாறு குறித்து கி. பி.1800 ஆம் ஆண்டு முதல் ஆராய தூண்டியது. சிறிய மற்றும் பெரிய அளவில் நடந்த புனரமைப்பு பணிகள் குறித்து ஒரு பட்டியல் எடுத்தேன். ஒரு முறை கூட பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தது கிடையாது. பக்தர்களை கோயிலுக்குள் விடமாட்டோம் என்று கட்டாயப்படுத்துவது மகாநிர்பந்தம் ஆகும்.
இனி கி. பி.1800 முதல் திருப்பதியின் புனரமைப்பு வரலாற்றை புரட்டி பார்ப்போம்
கி. பி.1800– பெருமாள் கையில் வலது மேற் கையிலும் இடது மேற்கையிலும் இருக்கும் சுதர்சன சக்கரத்திற்கும் பாஞ்சசண்யம் என அழைக்கப்படும் சங்குக்கும் அப்போது அர்ச்சகராக இருந்த ஸ்ரீனிவாச தீட்சிதலு ஐநூறு பகோடாக்கள் செலவழித்து தங்கம் அணிவித்தார். [Source: A Symposium on TirupatiVenkateshwara by P.T.JagannathaRao, 1952 Published by HH Sri SriMahantNarayanadossiVaru,)
பக்தர்கள் தரிசனம் அப்போது அனுமதிக்கப்பட்டது.
1907 ஆண்டு வரை மகா சம்புரோஷனம் நடந்த தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை.
1908– இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முப்பதாம் நாள் மகா சம்புரோஷனம் நடந்துள்ளது. கர்ப்ப கிரகமான ஆனந்த நிலையத்தின் மீதுள்ள கோபுரத்தில் பொன்னாலான கோபுர கலசம் நிறுவப்பட்டது. பத்மாவதி நாச்சியாருக்கு புதிய தங்கச் சங்கிலி நிரந்தரமாக அணிவிக்கப்பட்டது. இந்த பொன் ஆபரணத்தை அப்போது ஹாதிராம்ஜி மடத்தின் அதிகாரி வழங்கினார். அப்போது அந்த மடத்துக்கு ஸ்ரீ ஹாதிராம்ஜி அதிகாரி ராம லக்ஷ்மண தாசா எனப்படும் ஸ்ரீ பிரயாக் தாஸ் ஜி என்பவர் தலைவராக இருந்தார். இந்த மடத்தின் அடையாளமாக ‘SrI Ha A rAdAஎன்ற எழுத்துக்கள் அந்த நகையில் பொறிக்கப்பட்டிருக்கும் .
பக்தர்கள் அப்போது சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
1920 ஆம் ஆண்டு நடந்த சம்புரோஷனம் குறித்த பதிவுகள் இல்லை.
1934 மூலஸ்தானத்துக்கு வெளியே உள்ள தோரண வாயிலுக்கு பொன் வேயப்பட்டது. இதற்கு முட்டு கொடுக்க எதுவாக இரண்டு உறுதியான செப்பு தூண்களும் நடப்பட்டன. ஸ்ரீவாரி பெருமாளுக்கு வலது பக்கத்தில் உள்ள இலட்சுமி தாயார் சிலையிலும் சிறியளவில் செப்பனிடும் வேலைகள் நடந்தன.
பக்தர்கள் அப்போதும் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்
1946 — ஸ்ரீவாரி மகர தோரணத்தில் பெரியளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதற்கு முட்டு கொடுக்க இரண்டு செப்பு தூண்கள் நடப்பட்டன. பெருமாளின் வலது பக்கம் இருக்கும் இலட்சுமி தாயாரின் பொற்சிலைக்கு சில சீரமைப்பு பணிகள் நடைபெற்றன,
இந்த முறையும் பக்தர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்
1958 இந்த ஆண்டு மிக பெரியளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஆனந்த நிலையத்தின் கூ’ரைக்கு பொன் வேயப்பட்டது. பாலாலயம் கலயாகர்ஷனா என்ற முறையில் கும்பம் வைத்துச் செய்யப்படுவதால் பொதுவாக பத்து நாட்களுக்கு மட்டுமே வைக்கப்படும். இந்த முறை அதற்கும் அதிகமான நாட்களுக்கு தேவைப்பட்டதால் அத்தி மரத்தில் பகவானை செதுக்கி பாலாலயம் வைக்கப்பட்டது. அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி சி. அண்ணா ராவ் அவர்களும் நிர்வாகமும் சேர்ந்து பக்தர்களை மேலும் சிரமபடுத்தக் கூடாது என்று முடிவு செய்தனர். ஆனந்த நிலையம் பொன் வேய்ந்து முடிக்கும்வரை அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருக்க இயலாது என்பதால் மரத்தால் ஆனந்த நிலையம் போல ஒரு வடிவம் [மாடல்] செய்து அதனை அளவெடுத்து அதற்கேற்ப செப்புத் தகடுகளை வடிவமைக்கும் பணியை செய்தனர். அதன் பிறகு அவற்றிற்கு தங்க முலாம் பூசப்பட்டது. பக்தர்கள் திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். பாலாலயப் பணி 25-10 -1957இல் தொடங்கி 01-11 -1957 வரை நடந்தது. பழைய கல்யாண மண்டபத்தில் விமான பிரகாரத்தில் பாலாலயம் வைக்கப்பட்டது. [இப்போது அங்கு உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது]. பகலில் மூலஸ்தானத்தில் கடவுளை தரிசிக்க மூன்று நேரம் ஒதுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் தேதி தொடங்கிய மகா சம்புரோஷனம் இருபத்தேழாம் தேதி மகா பிரதிஷ்டையுடன் நிறைவுபெற்றது இந்த நாட்களிலும் தர்ம தரிசனம் நண்பகல் பன்னிரெண்டு முதல் பிற்பகல் மூன்று மணி வரை நடைபெற்றது. (Refer: TTD Flyer of 1958 in Picture).

1958 ஆம் ஆண்டின் செய்தி ஏட்டில் அங்குரார்ப்பணம் என்ற தலைப்பின் கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் ஆனந்த நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறும் போது மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாள் விக்கிரகம் எந்த பாதிப்பும் அடையாதபடி பாதுகாக்கப்பட்டதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. மூலஸ்தானத்தில் தோ[ள்]மாலை, அர்ச்சனை ஆகியவையும் நடைபெற்றன. ‘’ஏழுமலையானை ஒரு வினாடியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் வரும் பக்தர்களுக்கு ஒரு நொடி பார்வையாவது அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தீர்த்தம், சடாரி ஆகியவை அவர்களுக்கு கிடைக்கவில்லை’’ என்று தங்களால் முடிந்த சேவையை பக்தர்களின் ஆத்மா திருப்திக்காக செய்ததை தெரிவிக்கின்றனர். 1957 – 1958 இல் தான் திருக்கோயிலில் பெரியளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த கால கட்டத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கவில்லை. இங்கு வெளியிட்டுள்ள படங்களில் ஆனந்த நிலையத்தின் மேல் பொன் வேயப்படுவதையும் ஆயிரம் கால் மண்டபத்தில் பெருங் கூட்டம் நின்று அங்கு நடக்கும் வேலைகளை வேடிக்கை பார்ப்பதையும் நீங்கள் காணலாம். அப்போது பக்தர்கள் திருமலைக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

1970 – பெருமாளின் தாமரை பாதங்களின் கீழ் அதனை சுற்றிலும் கோமுகம் இருப்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அது செவ்வக வடிவில் இருபதடி ஆழத்தில் இருக்கும். அதில் விழும் அபிஷேக நீர் சோம சூத்திரத்தில் இருந்து வைகுண்டப் பிரகாரத்தில் இறங்கி அதன் பின்பு கர்ப்பக் கிரகத்துக்கு வெளியே போய் விடும். இந்த இருபதடி பள்ளமும் சாளக் கிராமக் கற்களும் மூலிகைகளும் வைத்து நிரப்பப்பட்டுள்ளன. அபிஷேக நீர் சோம சூத்திரம் வழியாக எட்டடி ஆழமுடைய வைகுண்ட பிரகாரத்தில் இறங்கி அதன் பின்னர் வெளியேறுகிறது. . இந்த வைகுண்ட பிரகாரம் ஸ்ரீ விஷ்வக்சேன விக்கிரகத்துக்கு பின்னால் அமைந்திருக்கிறது. இவற்றை ஒவ்வொரு வியாழக் கிழமையும் சுத்தம் செய்வர். வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களை வைகுண்ட துவாரம் வழியாக வலம் சுற்றி வர அனுமதிக்கப்படுவதால் அன்று தான் அவர்கள் இவற்றைப் பார்க்க முடியும். இவை அனைத்தும் கர்ப்ப கிரகத்துக்கு உள்ளேயே இருப்பதால் இங்கு வெளியாட்களை அனுமதிப்பது கிடையாது. இங்கு அர்ச்சகர்களே சாளக் கிராம கற்களையும் மூலிகைகளையும் எடுத்து சுத்தம் செய்து மீண்டும் நிரப்புவர். இதற்காக அவர்கள் தனி பயிற்சி எடுத்துள்ளனர்.
பெரியளவில் புனரமைப்பு வேலைகள் கோயிலில் நடந்தபோது கூட பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்படவில்லை. சில மணி நேரங்களாவது அவர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டனர்.

1982 – புதிய தங்கக் கொடி மரம் [துவஜஸ்தம்பம்] நடப்பட்டது. கொடி மரத்துக்கு முன்னால் இருக்கும் மகா பலி பீடத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. மகா சம்புரோஷனத்துக்கு பின்னர் ஐந்து நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெற்றது. கரடு முரடாக இருந்த கர்ப்ப கிரகத்தின் தரை சமதளமாக்கப்பட்டு நல்ல கற்கள் பதிக்கப்பட்டு தரை சீரமைக்கப்பட்டது. இவற்றை அர்ச்சகர்களே செய்து முடித்தனர் இதற்கிடையேயும் சாமி தரிசனத்துக்கு சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த நேரங்களில் அர்ச்சகர்கள் இந்த வேலைகளை நிறுத்தி வைத்தனர்.
1994 – ஸ்ரீவாரி பாதத்துக்கும் பத்ம பீடத்துக்கும் இடையில் அஷ்டபந்தனச் சாந்து பூசப்பட்டது. ஆனந்த நிலையத்தின் தங்க விமானம் பல்வேறு மூலிகைகளை கொண்டு மெருகு ஏற்றப்பட்டது.
இப்போது தேவஸ்தானம் கட்டாய ஒய்வு கொடுத்து அனுப்பி விட்ட ஸ்ரீ ராமன் தீட்சிதலு 1994 லும் 2006லும் ஆனந்த நிலையத்தின் மீது பிரதான அர்ச்சகராக நின்று மகா சம்புரோஷனப் பணிகளை மேற்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அங்கிருந்து தங்க கோபுரங்கள் மீது குடம் குடமாக புண்ணிய நீரை ஊற்றினார். பின்பு கீழே ஆனந்த நிலைய பிரகாரத்தில் நின்றபடி மேலே பார்த்து கை கூப்பி வணங்கி கொண்டிருந்த பக்தர்கள் மீதும் தெளித்தார்.2006 இல் அவர் தான் யஜ்மான்யனாக [தலைமை பொறுப்பு] இருந்தார், 2006இல் சம்புரோஷனமும் ஜாதிபந்தனமும் உத்சவ மூர்த்திகளான ஸ்ரீ, ஸ்ரீவாரு, ஸ்ரீ மலையப்பா சாமி, ஸ்ரீ தேவி, பூதேவி ஸ்ரீ கோதண்ட ராம சாமி, சீதா லக்ஷ்மண, ஸ்ரீ கிருஷ்ண சாமி, ருக்மிணி தாயார், மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆகியோருக்கு நடந்தன.
அப்போதும் பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்படவில்லை. சில மணி நேரங்களாவது அவர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டனர். 1800ஆம் ஆண்டில் இருந்து 2006 ஆம் ஆண்டு நடந்த மகா சம்புரோக்ஷனம் வரை பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.கர்ப்பக் கிரகத்தில் இருந்த சாமியை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
எல்லா சடங்குகளும் பழைய கல்யாண மண்டபத்தில் வைத்து நடத்தப்பட்டன. [அது தான் இன்றைய ஆனந்த நிலையத்தின் பிரகாரத்தில் உள்ள பரகாமணி ஆகும்]. பக்தர்கள் வலம் சுற்றி வரும் போது சாமிதரிசனமும் செய்தனர். அதே சமயம் யாகசாலையில் நடக்கும் ஹோமங்களையும் கண்டு வணங்கினர். இப்போது அந்த இடத்தில் உண்டியல் காணிக்கை கணக்கிடப்படுகின்றது.
தென் மாநிலங்களில் இருந்து ஹோமம் வளர்க்க எழுபது ரித்விக்குகள் தெரிவு செய்யப்பட்டனர். பக்தர்கள் அந்த திவ்விய ஹோமங்களை கண்டு வணங்கவும் அந்த வேத மந்திர உச்சாடனங்களின் அதிர்வுகளில் திளைக்கவும் அப்போது வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒலித்த நான்கு வேதங்களும் மகா பாரதமும் ஸ்ரீ பகவத் கீதையும் ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ விஷ்ணு புராணமும் அனைவரின் காதுகளுக்கும் ஆத்மாவுக்கும் அமுதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை இந்த ஹோமங்களை கண்டு வேத பாராயணத்தை கேட்டு வணங்கும் வாய்ப்பை அளிக்க மறுக்கிறது.
இது போன்ற புனித காரியங்களில் பொது மக்கள் ஈடுபாட்டை எப்போதும் மிராசி அர்ச்சகர்கள் ஆதரித்து வந்துள்ளனர், ஏகாந்த சேவையின் போது மட்டும் தான் அவர்கள் பக்தர்களை அனுமதித்தது கிடையாது. மற்ற நேரங்களில் யார் யாரெல்லாம் வந்து கலந்து கொள்ள முடியுமோ அவர்களை எல்லாம் வரும்படி அழைத்து அவர்கள் அந்த பூஜை அதிர்வுகளில் திளைத்து அவற்றில் பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.
மெல்ல மெல்ல திருப்பதி தேவஸ்தானம் இது போன்ற பொது ஜனப் பங்கேற்பு விஷயங்களுக்கு தடை விதிக்க விரும்புகிறது. அர்ச்சகர்களுக்கு கட்டாய ஒய்வு அளித்து அவ்ருகிறது. இப்போது பணியில் இருக்கும் பிரதான அர்ச்சகர், தெலுங்கு தேச கட்சியின் கையாளாக விளங்கும் திருப்பதி தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டவர் ஆகும். மற்ற அர்ச்சகர்களும் ஒப்பந்த பணியாட்கள் ஆவர். இவர்களுக்கு தேவஸ்தானம் சம்பளம் வழங்குகிறது. இவர்கள் தேவஸ்தானத்துக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளை சிரமேற் கொண்டு நடப்பவர்கள். இவர்களால் தேவஸ்தானத்தை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது. தேவஸ்தானம் கோயிலின் முழு கட்டுப்பாட்டையும் பூசைகள் சடங்குகள் யாகங்கள் உட்பட அனைத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து விட்டது. இந்த நிலை பொதுமக்கள் மத்தியில் மாநில அரசை பற்றியும் தேவஸ்தான நிர்வாகம் குறித்தும் சில கேள்விகளை எழுப்புகிறது,
- ஒன்பதாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை திருக்கோயிலை முழுதுமாக அடைப்பது ஏன். பக்தர் கூட்டத்தை சமாளிக்க இயலாது என்று சொல்வது ஏற்புடையதல்ல. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருங்கூட்டம்வரும் போது கூட ஸ்ரீ வராக சாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர், கோபுர தரிசனம்,கோயிலுக்கு வெளியே நின்று ஆனந்த நிலைய தரிசனம் ஆகியவற்றிற்கு அனுமதி கிடைத்தது.மக்கள் தங்களுக்கு தரிசனம் அளிக்கும் வாய்ப்பை பெருமாளே முடிவு செய்கிறார். அவர் அருள் இருந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்யும் பாக்கியம் தங்களுக்கு கிட்டும் என்று நம்புகின்றனர். தரிசனம் கிடைக்காவிட்டால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் பிராப்தம் தமக்கு இல்லை என்று நினைத்து வருந்தி வீடு திரும்புகின்றனர்.
- டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதி மன்றத்தில் கோயிலின் முழு அடைப்பை எதிர்த்து பொது நல வழக்கு போட்டிருக்கிறார். இந்த நாட்களில் கோயிலுக்குள் எதோ சதி செய்கின்றனரோ என்ற சந்தேகம் வலுப்படுகின்றது.
- கர்ப்ப கிரகத்தில் இருந்து ராமுலவாரி மேடாவுக்கு பங்காரு வக்கிலி வழியாக ஐநூறு சுரங்கப் பாதைகள் [துளைகள்] போடப்பட்டிருப்பதாக மக்கள் பேசி கொள்கின்றனர். பொக்கிஷம் ஏதேனும் இவ்வழியாக கடத்தப்படுமோ என்ற ஐயம் அவர்களுக்கு தோன்றியுள்ளது. இது உண்மையாக இருக்குமோ
- திருமலை திருப்பதி கோயிலில் மூன்று இடங்களில் புதையல்கள் இருப்பதாக ஒரு நம்பிக்கை பரவலாக உண்டு. ஒன்று ஆயிரம் கால் மண்டபத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் பழைய அழகான தோற்றம் அந்த ஆயிரம் கால் மண்டபத்துக்கு இனி கிடைக்குமா என்பது அந்த பகவானுக்கு தான் தெரியும். இரண்டாவது இடம் வகுள மாதா பொட்டு என்பதாகும். அங்கு தான் சாமிக்கு அன்னப் பிரசாதமும் நைவேத்தியங்களும் தயார் ஆகின்றன. அண்மையில் அங்கேயும் தோண்டி பார்த்துள்ளனர். மூன்றாவது இடம் பங்காரு வக்கிலியில் இருந்து ராமுலவாரி மேடா வழியாக கர்ப்ப கிரகம் வரை செல்லும் வழியில் உள்ளது.
- இதற்கும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா. உள்ளே இருக்கும் கோயில் பணியாளர்களுக்கும் சம்பள விடுப்பு கொடுத்து அவர்களும் கோயிலுக்குள் அந்த நாட்களில் வராமல் தடுக்கும் பணி நடைபெறுவதாக பேசி கொள்கிறார்களே. அது உண்மையா. கண்காணிப்பு கேமராக்களும் நீக்கப்படும் என்கிறார்களே இதற்கெல்லாம் தேவஸ்தானம் தக்க பதில் தருமா. நமது ஐயங்களை கோயில் நிர்வாகம் தீர்த்து வைக்குமா
- நான் முன்பு பெரிய புனரமைப்பு பணிகள் நடைபெற்ற காலங்களில் கூட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதை தெரிவித்தேன். இப்போது அதை விட பெரிய வேலைகள் எதுவும் நடைபெற இருக்கின்றனவா எதற்காக கோயிலை முற்றிலும் அடைக்கிறார்கள் ஸ்வயம்பு சாளக்கிரக விக்ரகத்தை கூடபார்க்க விடாமல் அடைப்பது ஏன்
- அலிபிரி முதல் திருமலை வரை செல்லும் பாதை கூட அடைக்கப்படுவது ஏன் என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். அந்த சாலையில் வாகனங்களை அனுமதிக்க மறுப்பது ஏன் தேவஸ்தான வண்டிகள் மட்டும் மேலேயும் கீழேயும் போய் வருவதற்கு எந்த தடையும் இல்லயே அப்படி என்றால் எதேனும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் பொக்கிஷங்கள் அந்த வண்டிகளில் கடத்தப்படுமோ. இவ்வாறு பல கேள்விகள் மக்கள் மனதில் அலை பாய்கின்றன எதற்கும் தேவஸ்தான நிர்வாகத்தில் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.
- இது தான் தக்க தருணம் நம் ஆச்சார்யர்கள் தேவஸ்தான நிர்வாகத்தை நோக்கி நமது ஐயங்களையும் கேள்விகளையும் எழுப்ப வேண்டும். அவர்களுக்கு இந்த கேள்விகளை கேட்கவும் அவற்றிற்கு பதில் பெறவும் அனைத்து உரிமைகளும் கடமைகளும் உண்டு. இந்து சமாஜத்தின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு என்பதால் அவர்கள் பொது வெளியில் இந்த கேள்விகளை தைரியமாக கேட்கலாம்
- இந்து சமாஜத்துக்கு திருக்கோயில் விஷயங்களில் விசேஷ பொறுப்புணர்ச்சி உள்ளது. எனவே நாம் நிர்வாக அதிகாரிக்கு மகா சம்புரோஷ்ணம் குறித்து கேள்வி கேட்டு கடிதம் எழுதலாம். ஊடகங்களில் இந்த பிரச்சனையை எழுப்பலாம் அதிகமானோர் நாளிதழ்களுக்கும் டிவி சேனல்களுக்கும் கடிதம் எழுதலாம். தேசிய மற்றும் மாநில தொலைக்காட்சிகளுக்கு இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கும்படி இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம். திருக்கோயில் அடைக்கப்ப்படுவதைக் கண்டித்து நம் எதிர்ப்பை தெரிவிக்கலாம். பக்தர்கள் கூட்டமாக போய் கோயில் நிர்வாக அதிகாரியை சந்தித்து கேள்விகள் கேட்கலாம்.
- தேவஸ்தானம் கோயில் நிர்வாகத்தை தன அதிகார வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டதால் இப்போது சடங்குகள் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. திருதராஷ்டிரா ஆலிங்கனம் செய்கிறது. நம்மை அணைப்பது போல அனைத்து நம்மை நொறுக்க முனைகிறது. நமது ஆலயத்தில் நாம் வழிபடும் உரிமையை எப்போதும் அந்த நிர்வாகம் தனது பொறுப்பில் வைத்துக் கொள்கிறது. அதனால் நிர்வாகம் சொல்லும் நேரத்தில் மட்டுமே நாம் இறைவனை வழிபட முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது. இதை நாம் உணராமலே இத்தனை நாளும் இருந்துவிட்டோம்.
ஊடகங்களும் சமூக வலை தளங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயிலின் இந்த முடிவில் தலையிட இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. நிர்வாகம் இதற்கு முன் எடுத்த முடிவில் இவர் பங்கு எதுவும் கிடையாது. இப்போது இவர் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். முந்தைய சம்புரோஷனங்களில் நடந்தது போல குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஊடகங்களின் ஆற்றலை இப்போது நம்மால் உணர முடிகிறது.] முதல்வர் ஐயா அவர்களுக்கு பக்தர்களாகிய நமது இன்னொரு விண்ணப்பமாவது, தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதோடு நின்றுவிடாமல் அங்கு நடக்கும் வேத பாராயணம் மற்றும் ஹோமங்களை நிர்வாகம் SVBC என்ற திருக்கோயில் டி வி சேனலில் நேரலையாகத் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.











![பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள் மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் – மத்திய அரசின் மௌனம் – ஒரு புரியாத புதிர் கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது. மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது. அது ஏன் என்று புரியவில்லை](https://tamil.pgurus.com/wp-content/uploads/2018/11/ya18b3-100x70.jpg)
